மாங்காய் சாதம்

மாங்காய் என்றால் பச்சடி, குழம்பு, ஊறுகாய் என்று வைப்பார்கள்! மாங்காயை வைத்து சாதமும் செய்யலாம்! இதனை நானே செய்து பார்த்தேன்! மிகவும் சுவையாக இருந்தது. உங்களுக்கும் சொல்லி தருகிறேன்! வீட்டில் செய்து பார்த்து ருசியுங்கள்! இதனுடன் சாம்பார் வைத்து சாப்பிடலாம்.

தேவையான பொருள்கள்:

  • வேகவைத்த சாதம் – 2கப்
  • துருவிய மாங்காய் – 1கப்
  • மஞ்சள் தூள் – 1/4ஸ்பூன்
  • கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு – 1ஸ்பூன்
  • வறுத்த நிலக்கடலை – 1கையளவு
  • காய்ந்த மிளகாய் – 6
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • கொத்தமல்லி இழை – சிறிதளவு
  • வறுத்து பொடித்த வெந்தயம் – 1/2 ஸ்பூன்
  • பெருங்காயத் தூள் – 1/4ஸ்பூன்
  • நல்லெண்ணெய் – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு


செய்முறை:

  • வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடிக்க விடவும்.
  • வெடித்தவுடன் உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, நிலக்கடலை, காய்ந்தமிளகாய் ஆகியவற்றை சேர்த்து பொன்நிறமாக வறுக்கவும்.
  • வறுத்ததும் கறிவேப்பிலை, வெந்தயம், பெருங்காயம் ஆகியவற்றை சேர்க்கவும்.
  • பின்பு அதனுடன் மஞ்சள் தூள், துருவிய மாங்காய் ஆகியவற்றை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்
  • வதக்கியவுடன் உப்பு, வேகவைத்த சாதத்தை சேர்த்து நன்கு கிளறவும்.
  • அடுப்பை சிறிதாக வைத்து தணலில் 5 நிமிடம் வைக்கவும்.
  • மேலாக கொத்தமல்லி இழையை தூவவும்.
  • சுவையான மாங்காய் சாதம் தயார்.

ரசம் சாதம்

இதையும் எல்லோருக்கும் செய்ய தெரியும்! நான் இந்த முறையில் செய்வேன்! நீங்களும் செய்து பாருங்கள்.

தேவையான பொருள்கள்:

வெந்த சாதம் – 2 கப்

மிளகு – 2 ஸ்பூன்

சீரகம் – 2ஸ்பூன்

பூண்டு – 3 நம்பர்

கறிவேப்பிலை – 2 கொத்து

கொத்தமல்லி தழை – சிறிதளவு

மஞ்சள் தூள் – சிறிதளவு

புளித்தண்ணீர் – 1/4 கப்

நாட்டு தக்காளி – 2 நம்பர் பொடியாக நறுக்கியது

காய்ந்த மிளகாய் – 3 நம்பர்

வேகவைத்த துவரம்பருப்பு – 2ஸ்பூன்

கடுகு, உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன்

பெருங்காயத்தூள் – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

தண்ணீர் – தேவையான அளவு

நல்லெண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

  • வாணலியில் தக்காளி, கொத்தமல்லி தழை ஆகியவற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு வேக விடவும்.
  • பின்பு மிக்ஸியில் மிளகு, சீரகம், பூண்டு, சிறிது கறிவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும்.
  • தக்காளி நன்கு வெந்த பின்பு அதனுடன் பொடித்த மசாலா, புளி தண்ணீர், உப்பு, தேவையான அளவு தண்ணீர், வேகவைத்த துவரம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து நுரை போன்று வந்தவுடன் அடுப்பை அணைத்துவிடவும்.
  • பிறகு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்தம் பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் ஆகியவற்றை நன்கு வறுத்து ரசத்தில் கொட்டி கிளறி மேலாக கொத்தமல்லி தழையை தூவி மூடி விடவும்
  • பின்பு சாதத்தை எடுத்து ரசத்தை கிளறாமல் மேலாக படிந்த நீரை தேவையான அளவு ஊற்றி கிளறவும். உப்பு பத்தவில்லையென்றால் கொஞ்சம் சேர்த்து மேலாக கொத்தமல்லி தழையை தூவவும்.
  • சுவையான ரசம் சாதம் தயார்.

« பழைய வரவுகள்