பூரி

இந்த பூரி ருசியாகவும் முறுமுறுப்பாகவும் இருக்கும். எளிதிலும் செய்து விடலாம். ஆறினாலும் நன்றாக இருக்கும். இதற்கு பூரி மசாலா சேர்த்து சாப்பிடலாம். நீங்களும் செய்து பாருங்கள்.

தேவையான பொருள்கள்:-

மைதாமாவு அல்லது கோதுமை மாவு – 3 கப்

சோளமாவு – 1/4கப்

காய வைத்த பால் – தேவையான அளவு

ரவை – 5ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

நல்லெண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:-

  • முதலில் வாய் அகன்ற பாத்திரத்தில் மைதாமாவு, சோளமாவு, ரவை, உப்பு, எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
  • தண்ணீருக்கு பதிலாக காய வைத்த பாலை அதில் தேவையான அளவு ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
  • பிசைந்த மாவை 1மணிநேரம் ஊற விடவும்.
  • பின்பு ஊறிய மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். அதில் ஒரு உருண்டையை எடுத்து சப்பாத்திகல்லில் சிறிது மைதா மாவை தூவி மாவையை வைத்து மிகவும் லேசாகவும் கனமாகவும் இல்லாமல் நடுத்தரமாக தேய்த்து எடுத்து வைத்துக் கொள்ளவும். இதே போல் அனைத்து உருண்டைகளையும் தேய்த்து வைத்துக் கொள்ளவும்.
  • பின்பு வாணலியில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தேய்த்த சப்பாத்தியை ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். இதனை குறைந்த தணலில் செய்தால் மிகவும் அருமையாக இருக்கும். தேவையான போது எடுத்து பரிமாறவும்.
  • சுவையான பூரி தயார்.

வெள்ளிரிக்காய் சப்பாத்தி

இந்த முறையில் நான் செய்வேன். என் கணவருக்கு சப்பாத்தி என்றாலே தூரம் ஓடிவிடுவார். ஆனால் இந்த முறையில் செய்துவைத்தால் விரும்பி சாப்பிடுவார். ஏனென்றால் சப்பாத்தியும் மிருதுவாக இருக்கும். மிகவும் ருசியாகவும் வித்தியாசமாகவும் மணமாகவும் இருக்கும். இதை எளிதிலும் செய்து விடலாம். நீங்களும் செய்து பாருங்கள்.

தேவையான பொருள்கள்:-

கோதுமை மாவு – 3கப்

வெள்ளிரிக்காய் – 2

உப்பு – தேவையான அளவு

நல்லெண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:-

  • முதலில் வெள்ளிரிக்காயை நன்கு அலசி தோலையையும் உள்ளே உள்ள விதையையும் எடுத்து விட்டு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும். ( வெள்ளிரிவிதையை தூக்கி போடாமல் தயிர் பச்சடியில் சேர்க்கலாம். அல்லது அதனை காயவைத்து பாயாசம், இனிப்பு வகை உணவுகளிலும் சேர்த்துக் கொள்ளலாம்.)
  • வாய்அகன்ற பாத்திரத்தை எடுத்து கோதுமை மாவு, உப்பு, சிறிது நல்லெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின்பு அதனுடன் தண்ணீருக்கு பதிலாக தேவையான அளவு அரைத்த வெள்ளிரிக்காய் விழுதை சேர்த்து நன்கு பிசைந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். அதை 1/4 நிமிடம் ஊற வைக்கவும்.
  • பின்பு அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். ஒரு உருண்டையை எடுத்து சப்பாத்திக்கல்லில் சிறு எண்ணெய்க்கு பதிலாக சப்பாத்தி மாவை தூவி உருட்டிய மாவை வட்டவடிவத்தில் நன்கு தேய்த்து எடுத்து வைத்துக் கொள்ளவும். இதே போல அனைத்து உருண்டைகளையும் தேய்த்து வைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் தோசைக்கல் காய்ந்ததும் சிறிது எண்ணெய் ஊற்றி தேய்த்த சப்பாத்தி மாவை எடுத்து அதில் வைத்து இருபுறமும் எண்ணெய்யில்லாம் வேகவிட்ட பின்பு இருபுறமும் சிறிது எண்ணெய் ஊற்றி பொன்நிறம் வந்தவுடன் ஹாட்பாக்ஸில் வைத்து சேகரித்துக் கொள்ளவும். தேவையான பொழுது எடுத்து பரிமாறவும்.
  • சுவையான வெள்ளிரிக்காய் சப்பாத்தி தயார்.

வேறு சில சப்பாத்தி தயாரிக்கும் முறைகள்:-

* தண்ணீருக்கு பதிலாக காய வைத்த பாலை சேர்த்து சப்பாத்தி மாவை பிசைந்து கொள்ளலாம்.

* தண்ணீரை கொதிக்க வைத்து மாவில் ஊற்றி சப்பாத்தி மாவை பிசைந்து கொள்ளலாம்.

* காரட்டை தோல் நீக்கி மிக்ஸியில் அரைத்து தண்ணீருக்கு பதிலாக சப்பாத்தி மாவை பிசைந்து கொள்ளலாம்.

* தண்ணீருக்கு பதிலாக புளிக்காத தயிர் சேர்த்து சப்பாத்தி மாவை பிசைந்து கொள்ளலாம்.

* ஏதாவது கீரை வகைகளை நன்கு அலசி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சிறிது எண்ணெய் விட்டு வதக்கி இதில் சேர்த்து சப்பாத்தி மாவை பிசைந்து கொள்ளலாம்.

- இப்படி ஏதாவது ஒன்றில் சப்பாத்தி செய்தால் மிகவும் ருசியாகவும் மிருதுவாகவும் இருக்கும்.

« பழைய வரவுகள்