
இந்த குழந்தை உங்களுடன் இருந்தால் ஆபத்து… இதை பார்ப்பதே பேராபத்து எனும் ஜோதிடர்களின் பேச்சை நம்பி, சிறு வயதிலேயே தன்னால், காசியில் கொண்டு போய் விடப்பட்ட ஆர்யாவைத் தேடி 14 வருடங்கள் கழித்து காசிக்கு வருகிறார் அவரது அப்பா அழகன் தமிழ்மணி. தாடி மீசையுடன் சாமி (கவனிக்கவும்… சாமியார் அல்ல சாமி!) ஆகி விடும் தன் பிள்ளை ஆர்யாவை காசியில் உள்ள பண்டிதர் உதவியுடன் பார்த்த மாத்திரத்திலேயே கண்டு பிடித்து விடுகிறார் தமிழ்மணி!
அதன் பின் அவரது குருஜி மூலம் பேசி, ஆர்யாவை தமிழகத்தில் உள்ள சொந்த ஊருக்கு அழைத்து வருகிறார் அப்பா. வந்த இடத்தின் தன்னை பெற்றெடுத்த தாயையே அசிங்கப்படுத்தும் ஆர்யா, ஊரின் ஒதுக்குப்புறத்தில் உள்ள சாமி கோயிலில் கஞ்சா சாமியார்களுடன் சேர்ந்து கஞ்சா அடித்தபடி பொழுதை கழிக்கிறார். காசியில் கற்ற வேத பாடங்களை தமிழ், இந்தி, சமஸ்கிருதத்தில் உளறியபடி நாட்களை நகர்த்துகிறார். ஒரு கட்டத்தில் குழந்தைகள், உடல் ஊனமுற்றவர்களை அடித்து, உதைத்து பிச்சை எடுக்க வைத்து பிழைப்பு நடத்தும் தாதா கும்பலில் பார்வையற்ற பூஜா சிக்கிக் கொள்ள, அவரது வேண்டுகோளுக்கு இனங்கி தானே கடவுளாகி அந்த குரூப்பின் முக்கிய புள்ளிகளுடன் மூர்க்கத்தனமாக மோதி அவர்களுக்கு நரகத்தையும், பூஜாவிற்கு சொர்க்கத்தையும் காண்பிப்பதே நான் கடவுள் படத்தின் மொத்த கதையும்.
இப்படி ஒரு காய்ந்து போன கதையை எத்தனை நகைச்சுவையாகவும், ஜனரஞ்சகமாகவும் சொல்ல முடியுமோ? அத்தனை அற்புதமாக சொல்லி கலர்புல் காட்சிகளாக்கி வெற்றி பெற்றிருக்கிறார் பாலா. கதாநாயகிக்கு கண் தெரியாது. பிச்சைக்காரியாக இருக்கிறார். நாயகன் ஆர்யாவோ நீண்ட ஜடா முடி, அடர்ந்த தாடி, அழுக்கு மண்டை ஓடு மாலை, சுடுகாட்டு பூஜை என சுத்த சன்யாசி! அப்பா அழகன் தமிழ்மணி, மொட்டைத்தலை வில்லன் ராஜேந்திரன், அவரது குடிபோதை அடியாட்கள், டோப்பா சுருள்முடி பிச்சை பார்ட்டி சிங்கம் புலி, ஆர்யாவை சாமியாக பூஜாவிற்கு அடையாளம் காட்டும் மலைக்கோயில் சாமியார் கோவை கிருஷ்ணமூர்த்தி, அழுமூஞ்சி அம்மா பாரதி, அழகு ப்ளஸ் அழுக்கு தங்கை புதுமுகம் கீர்த்தனா என முக்கிய பாத்திரங்கள் மட்டுமல்ல… பிசசை எடுக்க மொட்டை வில்லன் கோஷ்டியால் துன்புறுத்தப்படும் அனாதைகள், சிறுவனர்கள் என ஆளுக்கு ஒரு உடல் குறைபாட்டுடன் அறிமுகமாகியிருக்கும் 175 புதுமுகங்களும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். பிச்சைக்கார காட்சிகள் சோக கீதமே வாசித்தாலும்… அதனை படத்தின் கதையோடும், காட்சிகளோடும் பின்ன பிணைத்திருக்கும் இயக்குனர் பாலாவின் மெல்லிய நகைச்சுவை உணர்ச்சியும், இளையராஜாவின் பின்னணி இசையும், ஆர்தர் ஏ.வில்சனின் அழகிய ஒளிப்பதிவும், ஜெயமோகனின் வசனமும், நம்மை படத்தின் காட்சிகளோடும், கதை வசனத்தோடும் கட்டி போட்டு விடுகின்றன.
ஆரம்ப காட்சிகளில் காசியின் ஜனநெருக்கடி மிக்க பகுதிகள், அதன் பின் மலைக்கோயில் பிச்சைக்காரர்கள் அறிமுகம், ரயிலில் பாடி பிச்சையெடுக்கும் பூஜா அறிமுகம், போலீஸ் ஸ்டேஷனில் உல்டா பாடல், உல்டா நடிகர்கள் காமெடி போன்ற காட்சிகள் ரசிகர்களுக்கு புதிய உலகத்தையே படம் பிடித்து காட்டியது என்றால் மிகையல்ல. அதே நேரம் பூஜாவை அடைய துடித்து, பக்கம் பக்கமாக டயலாகக் பேசும் கொடூர மூஞ்சிக்காரரின் போர்ஷனை இன்னும் கொஞ்சம் வெட்டித் தூக்கியிருக்கலாம்.
ஆர்யா சுடுகாட்டு சாமி கால பைரவராகவே சில காட்சிகளில் நம்பை பயமுறுத்துகிறார்… சில காட்சிகளில் பரவசப்படுத்துகிறார். அதிகம் டயலாக் பேசாமல் நிறைய நடித்திருக்கும் ஆர்யாவுக்கு நிச்சயம் இப்படத்தின் மூலம் தேசிய விருதுகள் உள்ளிட்ட எக்கச்சக்க விருதுகம் குவியலாம். அதே மாதிரி பூஜாவிற்கும், அவரது பிரமாதமான நடிப்பு, விருதுகளை வசப்படுத்தி, வரிசைப்படுத்தலாம். ஆர்யா பூஜா தவிர வில்லன் ராஜேந்திரன், கோவை கிருஷ்ணமூர்த்தி, அழகன் தமிழ்மணி, சிங்கம்புலி, பாரதி, கீர்த்தனா, 175 புதுமுகங்கள் என அனைவருக்குமே பாராட்டு பத்திரமும், விருதுகளும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அத்தனை பேரையும் அந்த அளவுக்கு அதட்டி, உருட்டி, மிரட்டி இப்படி நன்றாக வேலை வாங்கியிருக்கும் பாலாவிற்கு <ஒட்டுமொத்த உயரிய விருதுகளையும் மொத்த குத்தகைக்கு விடலாம்.
கால பைரவசாமி மூலம் கர்ண கொடூர இதயங்களை கொன்று குவிப்பதுடன், கருணை கொலைகளையும் துணிச்சலாக ஆதரித்திருக்கும் பாலாவை மனமுவந்து பாராட்டலாம். வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத வித்தியாசத்துடனும், விறுவிறுப்புடனும் வெளிவந்திருக்கும் நான் கடவுள் நல்ல (வசூல்) கடவுள் ஆவது ரசிக கடவுள்களின் கைகளில்தான் உள்ளது!
நான் கடவுள் : பயமும் பரவசமும்
நன்றி தினமலர்! ![]()
